மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது இன்று முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்வடைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் எண்ணெய் குறியீடுகள் பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இன்றைய தரவுகளின்படி பிரதான எண்ணெய் வகைகளின் விலை விபரங்கள் வருமாறு:
- WTI Crude (அமெரிக்க எண்ணெய்): ஒரு பீப்பாயின் விலை 117.67 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 27.73% என்ற பாரிய வளர்ச்சியாகும்.
- Brent Crude (ப்ரெண்ட் எண்ணெய்): உலக எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும் பிரதான குறியீடான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 25.34% அதிகரித்து 116.18 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
- Murban Crude: மத்திய கிழக்கில் உற்பத்தியாகும் மர்பன் எண்ணெய் விலை 16.96% அதிகரித்து 120.75 டொலர்கள் வரை உயர்ந்துள்ளது.
- WTI Midland: இது மிக அதிகப்படியான உயர்வாக 30.17% அதிகரித்து 120.69 டொலர்கள் வரை எட்டியுள்ளது.
எரிவாயு மற்றும் பெட்ரோல் விலையிலும் அதிகரிப்பு:
எண்ணெய் விலைக்கு மேலதிகமாக, ஏனைய எரிசக்தி வளங்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன:
- இயற்கை எரிவாயு (Natural Gas) விலை 9.57% உயர்வடைந்துள்ளது.
- பெட்ரோல் (Gasoline) விலை 15.71% அதிகரித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கான ஒப்பந்தங்களின் கீழ் WTI Crude விலை 120.00 டொலர் எல்லை வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு நெருக்கடி மேலும் தீவிரமடைந்தால், வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் இன்னும் உயரும் அபாயம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் எரிபொருள் விலையானது கடந்த மாதம் நிலவிய விலையை விட இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

0 Comments