மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நிலவி வரும் போர் பதற்றம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய இராணுவ இலக்குகள் மற்றும் அணுசக்தி மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
தெஹ்ரானில் குண்டுமழை:
அமெரிக்கப் போர் விமானங்கள் ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குள் நுழைந்து பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. குறிப்பாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உளவுத்துறை தலைமையகங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கமேனியின் வளாகத்தை மட்டும் குறிவைத்து சுமார் 30-க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உச்ச தலைவர் உயிரிழப்பா? - முரண்பட்ட தகவல்கள்:
இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டிருக்கலாம் என FOX News மற்றும் Reuters போன்ற சர்வதேச ஊடகங்கள் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இதனை ஈரான் அரசு இதுவரை உறுதிப்படுத்தவில்லை. மாறாக, உச்ச தலைவர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பாக இருப்பதாகவும், நாட்டின் நிர்வாகம் வழக்கம்போல நடைபெறுவதாகவும் 'IranTimes' செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கிய தளபதிகள் பலி?
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இது ஈரான் இராணுவத்திற்குப் பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நெதன்யாகு மற்றும் டிரம்ப் கருத்து:
தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "கமேனி இப்போது உயிருடன் இல்லை என்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஈரானிய மக்கள் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட இது ஒரு நல்ல வாய்ப்பு" எனத் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், காமெனியின் மரணம் ஈரான் மக்களுக்கான நீதி எனத் தெரிவித்துள்ளார். "ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்க இது மிகப்பெரிய சந்தர்ப்பம். மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் வரை எமது நடவடிக்கைகள் தொடரும்" என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் பதிலடி:
தங்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அங்குள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் போர்க்களமாக மாறியுள்ள நிலையில், சர்வதேச சமூகம் பெரும் கவலையடைந்துள்ளது.
News
Disclimer Click

0 Comments