மட்டக்களப்பு வவுணதீவு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுள்ள ஒரு மர்மமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வவுணதீவு, கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் தாய் ஒருவர், தனது இரண்டரை வயதுக் குழந்தைக்குக் காய்ச்சல் காரணமாக மருந்து எடுப்பதற்காக கடந்த 19-ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
நேற்று (20) காலை தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்ற பொதுமக்கள், கழுத்தளவு நீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இளம் தாயை மீட்டுள்ளனர்.
தாய்க்கும் குழந்தைக்கும் இடையே சுமார் 25 கிலோமீற்றர் தூரம் இருந்த நிலையில், குறித்த குழந்தை கொத்தியாவலை வயல் பகுதியில் தனியாக அழுதுகொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
தாய் மீட்கப்பட்ட அதே கிணற்றிலிருந்து சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் அழுகிய நிலையிலான சடலத்தை தடயவியல் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தாய் பொலிஸாரிடம் அளித்த ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தில், தான் வைத்தியசாலையில் மருந்து எடுத்துக்கொண்டு, அடகிலிருந்த தங்க நகையை மீட்டுக்கொண்டு பேருந்தில் வீடு திரும்பியதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தமக்கு என்ன நடந்தது என்பது நினைவில்லை எனக் கூறியுள்ளார். அவர் தற்போது பெரும் அதிர்ச்சியில் (Trauma) உள்ளதால் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடத்தலா? அல்லது நகைக்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா? கிணற்றில் மீட்கப்பட்ட மற்றைய சடலம் யாருடையது? எனப் பல்வேறு கோணங்களில் கொக்கட்டிச்சோலை மற்றும் வவுணதீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 Comments