இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதால், அங்கு வசிக்கும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார விடுத்துள்ள அறிவிப்பின்படி, பின்வரும் நகரங்களில் வசிக்கும் இலங்கையர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது:
- ஹைஃபா (Haifa)
- நஹாரியா (Nahariya)
- அர்கோ (Acre)
- கலிலி (Galilee)
- அஃபுலா (Afula)
- கர்மெல் மலைத்தொடர் (Mount Carmel)
- நாசரேத் (Nazareth) மற்றும் திபெரியா (Tiberias)
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவும் பட்சத்தில், தூதரகத்தினால் அவ்வப்போது வழங்கப்படும் வழிகாட்டல்களைத் துல்லியமாகப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், தங்குமிடங்கள் மற்றும் பாதுகாப்பு அறைகள் (Bunkers) குறித்த விபரங்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை வெளிவிவகார அமைச்சு தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

0 Comments