லெபனானின் கிழக்குப்பகுதியிலுள்ள பெக்கா (Bekaa Valley) பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய கமாண்டோ வீரர்களுக்கும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதை ஹிஸ்புல்லாஹ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
சிரியா திசையிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தின் நான்கு ஹெலிகாப்டர்கள் லெபனான் எல்லைக்குள் ஊடுருவியதை ஹிஸ்புல்லாஹ் படைகள் அவதானித்துள்ளன.
ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய பின்னர், முன்னேறி வந்த இஸ்ரேலியப் படைகள் பெக்காவின் பால்பெக் (Baalbek) மாவட்டத்திலுள்ள நபி சிட் (Nabi Chit) மயானப் பகுதியை அடைந்தபோது, அங்கு தயார் நிலையில் இருந்த ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் வழிமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர்.
இஸ்ரேலியப் படைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மோதல் தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலியப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியவாறே அங்கிருந்து வெளியேறத் தொடங்கின.
இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கிச் சென்றபோது ஹிஸ்புல்லாஹ்வினர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பான துப்பாக்கிச் சூடு காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை மட்டும் நபி சிட் பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய 13 வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்கனவே அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், தற்போது லெபனான் எல்லையிலும் மோதல் வெடித்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
News From Aljazeera
Disclimer Click

0 Comments