சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8, 2026) நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையை உலகில் மனிதநேயம் நிறைந்த நாடாகக் கொண்டு செல்வதே தமது பிரதான எதிர்பார்ப்பு எனத் தெரிவித்தார்.
இலங்கை எத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் நாடு என்ற நாமத்தை உலகிற்கு கொண்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பெண்கள் கடன் பெறுவதற்குச் சொத்துக்கள் இல்லாவிட்டால், அதற்கான உத்தரவாதத்தை அரசாங்கமே வழங்கும் என்றும், கடனைச் செலுத்த முடியாமல் போனால் அதனை அரசாங்கம் ஏற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கிராமப்புறப் பெண்கள் சிக்கியுள்ள நுண்நிதி கடன் வலையிலிருந்து அவர்களை மீட்பதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், சலுகை வட்டியில் கடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் தரம் 6 முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படும். பரிவுணர்வுள்ள பிள்ளைகளை உருவாக்கும் வகையில் கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என அவர் கூறினார்.
இளைஞர்களைச் சீரழிக்கும் நச்சுப் போதைப்பொருளை முழுமையாக ஒழிப்பதற்கான திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனத் தாய்மார்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கத் தற்போதைய சட்டங்கள் போதாது எனின், புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கலாசார ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ள பெண்களை விடுவிப்பதற்கான சட்டங்களும் கொண்டு வரப்படும்.
சமீபத்திய வரலாற்றில் அதிகளவான பெண்கள் ஓரிடத்தில் திரண்ட முதல் சந்தர்ப்பம் இதுவெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதுவே அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைக்குச் சான்று என்றும் தெரிவித்தார்.

0 Comments