மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் போர்ச் சூழல், ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய புதிய ஏவுகணைத் தாக்குதல்களால் மேலும் மோசமடைந்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தாக்குதலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல், ஈரானில் இருந்து இஸ்ரேலை இலக்கு வைத்து குறைந்தது ஐந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பு கண்டறிந்துள்ளது.
இஸ்ரேலிய வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் (Air Defense Systems) தற்போது முழுமையாகச் செயற்பட்டு வருவதாகவும், ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் (SMS Alerts) அனுப்பப்பட்டுள்ளன. அல்ஜெஸீரா ஊடகமும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் இரவு முழுவதும் பாதுகாப்புப் புகலிடங்களுக்குள் (Shelters) தஞ்சமடைந்துள்ளனர். இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு மேலதிக அழுத்தத்தைக் கொடுப்பதற்காகவும், மக்களைப் புகலிடங்களிலேயே முடக்கி வைப்பதற்காகவும் வெவ்வேறு நேரங்களில் இந்த ஏவுகணைகளை ஈரான் தொடர்ந்து ஏவி வருவதாக இஸ்ரேலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
போரின் முதலாம் வாரத்தில் ஈரானிலிருந்து 1,000 ஏவுகணைகள் ஏவப்படலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பு எதிர்பார்த்திருந்தது. ஆனால் இதுவரை 200 ஏவுகணைகள் மட்டுமே ஏவப்பட்டுள்ளன. இது ஏவுகணைகளை அனுப்பும் ஈரானின் திறனில் ஏற்பட்டுள்ள பலவீனத்தைக் காட்டுவதாகவும், இது இஸ்ரேலின் "செயல்பாட்டு வெற்றிகளால்" (Operational Successes) ஏற்பட்டதாகவும் இஸ்ரேலியர்கள் நம்புகின்றனர்.
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் அதிகரித்து வரும் இந்த நேரடி மோதல் நிலைமை, ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்திலும் பாரிய போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments