மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையில் தற்போதைக்கு 'வீட்டிலிருந்து வேலை செய்யும்' (Work from Home) முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகள் தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க 'Work from Home' முறைக்கு மாற முற்பட்டாலும், இலங்கையில் அத்தகைய நிலையை இப்போதைக்கு ஏற்படுத்த வேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அது குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.
எரிசக்தியைப் பாதுகாத்துக் கொண்டு மக்கள் தங்களது அன்றாடப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் கூறினார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பை நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சர் எச்சரித்தார். அமெரிக்க ஜனாதிபதி உட்பட மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் அரசியல் மற்றும் இராணுவத் தீர்மானங்களுக்கு ஏற்பவே, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை மாற்றமடையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தற்போது அமெரிக்காவின் KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது போன்ற சம்பவங்கள் மற்றும் வளைகுடா பிராந்திய போர் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments