பிரேசிலின் பிரபல சுற்றுலா நகரமான ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro)
நடைபெற்ற கோர ஹெலிகொப்டர் விபத்தில், விமானி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
மூன்று சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்தது எங்கு?
பிரேசிலின் அடர்ந்த காடுகள் மற்றும் செங்குத்தான மலைப்பகுிகளைக் கொண்ட டிஜுகா தேசிய பூங்காவிற்குள் (Tijuca National Park)
உள்ள 'விஸ்டா சைனீசா' (Vista Chinesa) எனப்படும் சீனப் கோபுரப் பகுதிக்கு
அருகில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்
கொலம்பியாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக,
அக்குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் ரியோவிற்குச் சுற்றுலா
சென்றுள்ளனர்.
ஹெலிகொப்டரில் ஒரே நேரத்தில் மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்
என்பதால், அக்குடும்பத்தினர் இரு குழுக்களாகப் பிரிந்து பயணம்
செய்துள்ளனர்.
உடல் கருகிய நிலையில் மீட்பு
செங்குத்தான மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் உடனடியாகத் தீப்பற்றி எரிந்ததால், அதில் பயணித்தவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாகத் தீயணைப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சடலங்கள் முற்றிலும் கருகிய நிலையில் இருந்ததால், அவர்களை அடையாளம் காணும் பணியில் கொலம்பிய தூதரகம் பிரேசில் அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. உயிரிழந்தவர்கள் கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை கொலம்பிய தூதரகமும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
சுற்றுலாத் துறையில் பாதுகாப்பு கேள்விக்குறி
கடந்த ஜூன் மாதம் ரியோ டி ஜெனிரோ நகருக்கு மேலே பறந்த இரண்டு ஹெலிகொப்டர்கள்
நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிரபல அமெரிக்கப் பாடகர் ஆலிவர் ட்ரீ
உட்பட 6 பேர் பலியான சோகம் மறைவதற்குள், தற்போதைய இந்தச் சம்பவம் சுற்றுலாப்
பயணிகள் மத்தியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுற்றுலா ஹெலிகொப்டர் சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடி கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு பிரேசிலின் தேசிய சிவில் விமான போக்குவரத்து முகமைக்கு ரியோ நகரின் மேயர் எட்வார்டோ கவாலியேரே கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Comments